சென்னை-
கடந்த ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஜூன் மாதம் ரயில் சேவையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் தற்போது பணிகள் முடிக்கப்பட்டு நேற்று டீசல் என்ஜின் இயக்கப்பட்டு சோதனை நடந்தது.
வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 770 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் சேவைக்கான ரெயில் பாதை, ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்து விட்டது.
இந்தச் சோதனையில் கற்கள் போடாமல் அமைக்கப்பட்டுள்ள ரயில் தண்டவாளங்களின் உறுதி தன்மை, உயர் மின்அழுத்த பாதைகள், சிக்னல், சுரங்கப்பாதையில் காற்றோட்டம், ரயில் ஓடும்போது தண்டவாளம் அருகில் உள்ள கட்டுமானங்களில் ரயில் மோதாமல் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதா போன்ற சோதனைகள் செய்யப்பட்டன.
இன்று மெட்ரோ ரயிலை இயக்கி சிக்னல் சோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் சுரங்க ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஸ்கிரீன் கதவுகள், தானியங்கி கட்டணம் சேகரிப்பு எந்திரம் செயல்படும் விதம், ரயிலில் உள்ள கருவிகளால் முறையாக தண்டவாளம் அருகில் உள்ள சிக்னல்களுக்கு ஏற்ப இயக்க முடிகிறதா? என்பது குறித்தும், வேகமாக மெட்ரோ ரயிலை இயக்கியும் சோதனை நடத்தப்படுகிறது.
இந்தச் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த பின்னர், ஜனவரி முதல் அல்லது 2- ஆவது வாரத்தில் பாதுகாப்பு ஆணையரின் சோதனை நடக்கும்.
தொடர்ந்து ஜனவரி இறுதியில் ரயில் போக்குவரத்தைத் தொடங்கி, வடசென்னையையும், தென்சென்னையையும் மெட்ரோ ரயில் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.