கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலக்கட்டத்தில், ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. இதனால் சிறுத்தொழில் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பொருளாதார இழப்பை சந்தித்தன. தனியார் நிறுவனங்களில் வேலையிழப்புகள் அதிகரித்தன. வேலையிழந்தவர்கள் பணத்தேவைக்காகவும், குடும்பத்தை நடத்தவும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, ஆன்லைனில் கடன் செயலியை பதிவேற்றம் செய்து உடனடியாக கடன் பெறலாம் என்று கவர்ச்சி விளம்பரங்களை இணையதளங்களில் சில நபர்கள் வெளியிட்டனர்.இதையடுத்து பல்வேறு பெயர்களில் இயங்கும் இந்த செயலிகளை பலரும் பதிவேற்றம் செய்து கடன் பெற்று வந்தனர். ஆனால் கந்துவட்டி கொடுமையைவிட ‘ஆன்லைன்’ கடன் வட்டி கொடுமை அதிகமானது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த விவேக் (27) என்பவர் தனது தந்தையின் மருத்துவ செலவுக்காக ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.4 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.
ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் அவரால் கடனை செலுத்த முடியாததால், கடன் வழங்கிய நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் விவேக்கை ஆபாசமாகத் திட்டி அவமானப்படுத்தினர். இதுதொடர்பான உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் அவமானம் அடைந்த விவேக் தனது கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்று ஆன்லைன் கடன் வட்டி கொடுமையால் பலர் இன்னல்களுக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை முடிவையும் நாடுகின்றனர்.இந்தநிலையில் சென்னை வேங்கைவாசலை சேர்ந்த கணேசன் என்பவர் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை சமீபத்தில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் வேலையில்லாமல் பணத் தேவைக்காக கஷ்டப்பட்டு கொண்டிருந்தேன். அப்போது சமூகவலைத்தளங்களில் ‘லோன் ஆப்’ (கடன் செயலி) மூலம் உடனடி கடன் கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து ‘எம் ரூபி’ என்ற செயலியை பதவிறக்கம் செய்தேன்.
அப்போது என்னுடைய பான்கார்டு, ஆதார் அட்டை, புகைப்படம் போன்ற விவரங்கள் செயலில் பதிவு செய்யப்பட்டது. நான் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கினேன். இதற்கு ஒரு வாரத்துக்கு ரூ.1,500 வட்டியாக பிடித்துக்கொண்டு, ரூ.3 ஆயிரத்து 500 பணத்தை எனது வங்கி கணக்கில் போட்டார்கள். ஆனால் அவர்கள் போட்ட நிபந்தனையின்படி என்னால் வட்டி கட்ட முடியவில்லை. இதனால் 45 வெவ்வேறு செயலிகளில் கடன் பெற்று செலவுக்கும், வட்டி கட்டவும் பயன்படுத்தி வந்தேன்.
இந்தநிலையில் என்னால் ஒரு வாரத்துக்கு வட்டி கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஒருநாளைக்கு ரூ.100-க்கு 2 சதவீதம் வட்டி கட்டவேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். பின்னர் தினமும் வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து என்னை தொடர்பு கொண்டு ஆபாசமாகவும், அருவெறுக்கத்தக்க வகையிலும் பேசி அவமானப்படுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி எனது நண்பர்கள், குடும்பத்தினர் எண்களையும் தொடர்புக்கொண்டு அவமானப்படுத்தி மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே அதிக வட்டி வசூலிக்கும் ‘கடன் செயலி’யை சேர்ந்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கூறியிருந்தார்.