இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.43 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6.93 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் உலகில் தற்போது குறைந்தது நான்கு வகையான கொரோனா வைரசுகளாவது பரவியிருக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கூறியதாவது; 2019 ஆம் ஆண்டு நவம்பரில் சீனாவின் வுகானில் கொரோனா தொற்று பரவத் துவங்கிய இரண்டு மாதங்களிலேயே அதன் முதலாவது மரபணு மாற்றம் ஏற்பட்டதாக அது தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் இந்த மரபணு மாற்ற வைரஸ் வீரியம் மிக்கதாக மாறி, பெரும்பாலான தொற்றுகளுக்குக் காரணமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக மரபணு மாற்றம் பெற்ற வைரஸ், கடந்த ஆகஸ்டிற்கும் செப்டம்பருக்கும் இடையே தோன்றியிருக்க வாய்ப்புள்ளது. இறுதியாக கடந்த மாதம் பிரிட்டனில் மரபணு மாற்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதற்கும் முந்தைய கொரோனா வடிவத்திற்கும் மரபுசார் தொடர்பு இல்லாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.