மியான்மர் (மியான்மார்) அல்லது பர்மா ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த நாடாகும். இன்றைய இரும்புத் திரை நாடு. 1948-ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. 1989- ஆம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் என்று மாற்றினர். அப்போதைய தலைநகர் ரங்கூன் பின்னர் யங்கோன் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2006- ஆம் ஆண்டின் பின்னர் மியான்மரின் தலைநகராக நைப்பியித்தௌ மாற்றியமைக்கப்பட்டது.
12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி பொ.மு. முதலாம் நூற்றாண்டிற்றான் தொடங்கியது எனக் கருதப்படுகிறது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி: பர்மியம்.
பல்லாயிரக்கணக்கான புத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது ‘Land of Pagodas’ என்றும் வழங்கப்படுகிறது. யங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட “ஷ்வே டகோன் பகோடா” மிகவும் புகழ் பெற்றது. மண்டலையில் உள்ள குத்தோடௌ தாதுகோபத்தில் உலகின் மிகப்பெரிய புத்தகம் (729 பளிங்குப் பலகைகளால் ஆனது) உள்ளது