நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு விநியோக சவால்களால் எழும் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பெட்ரோனாஸ் உடனான ஒத்துழைப்பு உட்பட, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) வழங்குவதற்கு மலேசியாவின் உதவியை வங்கதேசம் கோரியுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இன்று தொலைபேசி உரையாடலின் போது வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்த விஷயத்தைத் தன்னிடம் தெரிவித்ததாக அன்வர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.
குறிப்பாக எரிசக்தி மற்றும் முதலீட்டுத் துறைகளில், மலேசியா-வங்கதேச உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாக அன்வர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும், மேலும் பல வாய்ப்புகளை உருவாக்கவும், ஆக்சியாட்டா சம்பந்தப்பட்ட முதலீட்டு மேம்பாடுகள் மற்றும் எம்எம்சி துறைமுகத்துடனான சாத்தியமான மூலோபாய ஒத்துழைப்பு உள்ளிட்ட பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்று அவர் மேலும் கூறினார்.
இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், பரஸ்பர மரியாதை மற்றும் நடைமுறை ஒத்துழைப்பின் அடிப்படையில் வங்கதேசத்துடனான நீண்டகால நட்பை வலுப்படுத்துவதில் மலேசியா உறுதியாக இருக்கும் என்று அன்வர் கூறினார். அனைத்துலக ஊடக அறிக்கைகளின்படி, மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து வங்காளதேசத்தில் நிலவி வரும் எரிவாயு விநியோகப் பற்றாக்குறை, ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தால் மேலும் மோசமடைந்துள்ளது.









