ஜகார்தா-
ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 4 நிமிடத்தில் ராடாரில் இருந்து விமானம் மறைந்தது. மேலும், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது. தீவு நகரான போண்டியானாக்கிற்கு ஜாவா கடற்பரப்பு வழியாக 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது ரேடாருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பெண்டன் மாகாண எல்லைக்கு உள்பட்ட ஜாவா கடற்பரப்பில் பயனிக்கும்போது விமானம் மாயமாகியுள்ளது.
இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். ஜாவா கடற்பரப்பிற்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது தகவல் துண்டிக்கப்பட்டதால் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதனால், ஜாவா கடலில் விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
62 பேருடன் சென்ற போயிங் 737 விமானம் மாயமாகியுள்ள நிலையில், விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதால் இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகங்கள் குறித்தும், மாயமான போயிங் விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.