உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டகடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.
ராமர் கோயிலை கட்ட சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என்றுகோயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த பின்னணியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடை திரட்டும் பணி கடந்த 15- ஆம் தேதி தொடங்கியது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல் நபராக ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார். நாடு முழுவதும் 5.25 லட்சம் கிராமங்களில் நன்கொடை வசூல் செய்யும் பணி வரும் பிப்ரவரி 27- ஆம் தேதி வரை முழுவீச்சில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:
ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்கிவிட்டது. 39 மாதங்களில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதாவது வரும் 2024- ஆம்ஆண்டுக்கு முன்பாக ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு நன்கொடை வழங்கியதில் எந்த தவறும் இல்லை. இந்தியாவின் ஆன்மா ராமர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டின் முதல் குடிமகன். இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் ராமர் கோயில் கட்டுமான பணிக்கு நன்கொடைகளை வழங்கலாம்.
நன்கொடைகள் குறித்த முழுமையான தகவல்கள் தலைமைக்கு இன்னும் வந்து சேரவில்லை. எனினும் இதுவரை ரூ.100 கோடி நன்கொடை கிடைத்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ராமர் பாலம் கட்ட அணில் உதவி செய்த கதையை எனது மகளிடம் கூறினேன். இதே பாணியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நம்மால் முடிந்த நன்கொடையை வழங்க வேண்டும். நான் எனது நன்கொடை கடமையை நிறைவேற்றிவிட்டேன். நீங்களும் உங்கள் வசதிக்கு ஏற்ப உங்களால் முடிந்த வகையில் நன்கொடை வழங்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை பிரணிதா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ” ராமர்கோயில் கட்டப்படுகிறது. இதற்காகமக்கள் நன்கொடை வழங்கி வருகிறார்கள். நானும் கோயில் பணிக்கு நன் கொடை வழங்கியுள்ளேன். நீங்களும் நன்கொடைவழங்கி ராமரின் ஆசி பெறுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.