புதுடெல்லி:
டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் முற்றுகை போராட்டம் இன்று 57- ஆவது நாளாக நீடித்து வருகிறது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கத் தலைவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளது.
விவசாயிகள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றே தீரவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு இந்த சட்டங்களை வாபஸ் பெற மறுக்கிறது.
அதேநேரத்தில் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு தயாராக உள்ளது. இதை ஏற்கமாட்டோம், சட்டத்தை முற்றிலும் விலக்கியே ஆக வேண்டும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.
இதன் காரணமாக பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு இன்று மீண்டும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இது 10- ஆவது கட்டபேச்சுவார்த்தை ஆகும்.
பிற்பகலில் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இதில் மத்திய அரசு அதிகாரிகள் , விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
மத்திய மந்திரிகள் பங்கேற்பார்களா என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இன்றைய பேச்சுவார்த்தையிலாவது தீர்வு காணப்படுமா என்று தெரியவில்லை.
ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தாலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரமாக்கி வருகின்றனர்.
26-ஆம் தேதி குடியரசு தின நாளில் டெல்லியில் 1 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. டெல்லிக்கு வெளியே போராட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று போலீசார் கூறுகின்றனர்.
அதை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி நகருக்குள்தான் போராட்டத்தை நடத்துவோம் என்று பிடிவாதமாகக் கூறி வருகிறார்கள்.