ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் ஒன்றில் 42 வயதான சுகாதார பணியாளர் ஒருவருக்கு நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனே மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவரது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டது தெரிய வந்தது.
இதுபற்றி மாநில பொது சுகாதார இயக்குனர் ஜி.சீனிவாசராவ் கூறுகையில், “அவரது சாவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்பது ஆரம்ப கண்டுபிடிப்புகளில் தெரியவந்துள்ளது” என தெரிவித்தார்.
இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பிறகு இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.