மேட்ரிட்:
இந்த கட்டடத்தை பாதிரியார்கள் தங்கி பயிற்சி பெறவும், வீடற்றவர்களுக்கு உணவு வழங்கவும் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி 3 மணி அளவில் அங்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அந்த சத்தத்தால், அந்தப் பகுதியே குலுங்கியது. அதைத் தொடர்ந்து தீப்பிடித்தது. புகை மண்டலமும் உருவானது. கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து தூள் தூளானது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இது குறித்த தகவல் அறிந்ததும் அவசரகால பணியாளர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு அருகே பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என போலீஸ் அதிகாரிகள் தடை விதித்தனர்.
வெடிவிபத்துக்கான காரணம் உறுதியாக தெரிய வரவில்லை. இருப்பினும், அந்த கட்டடத்தில் கொதிகலன் பழுதை கியாஸ் தொழிலாளர்கள் சரி செய்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட கியாஸ் கசிவால், பலத்த சத்தத்துடன் பயங்கர வெடிவிபத்து நேரிட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
3 பேர் பலியாகி இருப்பதை மேட்ரிட் நகரத்துக்கான அரசு பிரதிநிதி ஜோஸ் மேனுவல் பிராங்கோ உறுதிபடுத்தினார்.
இந்த சம்பவத்தையொட்டிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அவற்றில் கட்டிடத்தின் 4 தளங்கள் இடிந்து சேதம் அடைந்திருப்பதையும், புகை பரவியதையும் காட்டின.
இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்த கட்டடத்திற்கு அருகில் இருந்த பராமரிப்பு இல்லத்தின் 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். வெடிவிபத்தின்போது அருகில் இருந்த பள்ளிக்கூடத்தினுள் இருந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.