ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெல்ஹார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், ராஷ்ட்ரீய ரைபிள் படையினர், சிறப்பு நடவடிக்கை குழுவினர், காஷ்மீர் போலீசார், மத்திய ஆயுதப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று குறிப்பிட்ட இடத்தை சீல் வைத்தனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. பின்னர் இந்த சண்டை ஓய்ந்தது.
பயங்கரவாதிகளை சரணடையுமாறு பாதுகாப்பு படைகள் சார்பில் கூறப்பட்டது. அவர்கள் உடனே சரண் அடையவில்லை. இருப்பினும் அப்பகுதியில் இருந்து அவர்கள் தப்பிவிடாதபடி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஒரு பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிக்க முயன்றார். ஆனால் அவர் மீது பாதுகாப்பு படையினர் திருப்பிச் சுட்டதில் காயம் அடைந்தார். அவர் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்கப்பட்டார்.
அதன்பின், பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை சரணடையுமாறு பாதுகாப்பு படையினர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர். அதைத் தொடர்ந்து, 2 பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் முன் நேற்று அதிகாலை சரணடைந்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.