சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், தேனி மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் எஸ்.நளினி, எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி உதவி பேராசிரியரும், அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவருமான டாக்டர் பெருமாள் பிள்ளை உள்பட 8 டாக்டர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசு பணியில் உள்ள இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளது. கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் கூட அரசு டாக்டர்கள், தமிழக அரசு டாக்டர்களை விட அதிக ஊதியம் வாங்குகின்றனர். இந்த நிலையில், அரசு டாக்டர்களுக்கு ஊதியஉயர்வு தொடர்பாக கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதன்படி முதல் 3 ஆண்டில் ஊதியஉயர்வு வழங்க வேண்டும், அதன்பின்னர், 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஊதியஉயர்வு வழங்க ஆய்வு செய்ய வேண்டும். இந்த அரசாணையின்படி, 2012- ஆம் ஆண்டு மறுஆய்வு நடந்தது. அதன்பின்னர், 2017ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய ஊதிய உயர்வு மறு ஆய்வு இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால், டாக்டர்கள் ஊதிய உயர்வு கிடைக்காமல் கடும் சிரமத்தில் உள்ளனர்.
கொரோனா காலத்தில் ஏராளமானவர்களுக்கு அரசு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால் பல டாக்டர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிலர் இறந்தும் விட்டனர். ஏற்கனவே கடினமான பணியில் ஈடுபட்டுள்ள அரசு டாக்டர்கள், மன அழுத்தத்தில் உள்ளனர். எனவே, அரசாணையின்படி, பிற மாநில டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து நாங்கள் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கவுதமன், 2009- ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அரசே அமல்படுத்தாமல் இழுத்தடிக்கிறது என்று வாதிட்டார்.
இதையடுத்து, இந்த அரசாணையை அமல்படுத்த அரசுக்கு விருப்பம் இல்லையா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் பாப்பையா, இந்த வழக்குகளுக்கு பதில் அளிக்க அவகாசம் கேட்டார். இதையடுத்து, விசாரணையை வருகிற (பிப்ரவரி) 3-ந ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, அதற்குள் பதில் அளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.