புதுடெல்லி:
குடியரசு தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 26 ஆம் நாள், வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 44 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கோட்டை நோக்கி விவசாயிகளை திருப்பி வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பஞ்சாபி நடிகர் தீப் சித்து மற்றும் விவசாய சங்க தலைவர்கள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். செங்கோட்டையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி, தடயங்களை சேகரித்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் தீப் சித்து, செங்கோட்டையில் மதக் கொடியை ஏற்றிய ஜக்ராஜ் சிங், குர்ஜாத் சிங், குர்ஜந்த் சிங் ஆகிய 4 பேரை கைது செய்வதற்கு துப்பு கொடுத்தால் தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், ஜாஜ்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.