பாலக்காடு அருகே தோஷம் நீங்குவதற்காக 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த கர்ப்பிணி தாயை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுலைமான் (வயது 40). இவருடைய மனைவி சபிதா (38). இவர் அங்குள்ள மதரசாவில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலையில் பாலக்காடு தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்ட சபிதா, தனது 3- ஆவது மகனை கொலை செய்துவிட்டதாகவும், அவனுடைய உடல் குளியலறையில் இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாதன் தலைமையில் உடனடியாக சபிதா வீட்டிற்குச் சென்றனர். அங்கு ஓர் அறையில் சபிதா அமர்ந்து இருந்தார். அவரை அழைத்துக் கொண்டு அங்கிருந்த குளியலறைக்கு போலீசார் சென்றபோது அங்கு சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாகக் கிடந்தான்.
உடனே போலீசார் அந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சபிதாவை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். அதில் அவரே தனது மகனை நரபலி கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாதன் கூறியதாவது:-
சபிதா கடந்த சில நாட்களாக சோர்வான நிலையில் இருந்துள்ளார். அவருக்கு தெய்வதோஷம் இருப்பதாகவும், அதற்கு 3- ஆவது மகனை நரபலி கொடுத்தால் அந்த தோஷம் நீங்குவதுடன், மகனும் உயிரோடு வந்து விடுவதாகக் கனவு வந்து உள்ளது.
எனவே அவர் தனது 3- ஆவது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து, தனது 3- ஆவது மகன் அருகே சென்றார். அப்போது அவன் தூங்கிக்கொண்டு இருந்தான். உடனே அவனுடைய கை காலை கட்டினார். பின்னர் அவன் சத்தம் போடுவதை தடுக்க வாயில் துணியை திணித்து உள்ளார்.
பின்னர் யாருக்கும் தெரியாமல் மகனை வீட்டில் உள்ள குளியலறைக்கு தூக்கிச்சென்றார். பிறகு சமையல் செய்யும் கத்தியை எடுத்து கோழியை அறுப்பதுபோன்று, மகன் என்றும் பாராமல் தனது மனதை கல்லாக்கிக் கொண்டு மகனின் கழுத்தை அறுத்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஆமிலின் பரிதாபமாக இறந்தார். ஆனால் மகன் இறந்த மறு நிமிடத்தில் உயிரோடு வருவதாக கனவு அவருக்கு ஏற்கனவே வந்து இருந்தது. ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் இறந்த மகன் உயிரோடு வரவில்லை.