ஜாட் படைப்பிரிவுக்கு ராஜ்நாத் சிங் கோப்பை
குடியரசு தினவிழாவில் சிறந்த அணிவகுப்பை வெளிப்படுத்திய ஜாட் படைப்பிரிவுக்கு ராஜ்நாத் சிங் கோப்பை வழங்கி பாராட்டினார்.
குடியரசு தினவிழாவில் சிறப்பான அணிவகுப்பை மேற்கொள்ளும் படைப்பிரிவுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு நடந்த விழாவில் மிடுக்கான அணிவகுப்பை வெளிப்படுத்திய ஜாட் படைப்பிரிவு சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
முப்படைகளுக்கான பிரிவில் இந்த படைப்பிரிவு பரிசை வென்றுள்ளது. இதைப்போல மத்திய ஆயுதப்படைகள் மற்றும் பிற சேவைகள் பிரிவில் டெல்லி போலீசார் சிறந்த அணிக்கான பரிசை வென்றுள்ளனர்.
இந்த 2 அணிகளுக்கும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ஜாட் படைப்பிரிவின் வீரதீர செயல்களை பாராட்டினார். அத்துடன் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ளும் டெல்லி போலீசாருக்கும் அவர் புகழாரம் சூட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் முப்படை தலைவர் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.