வெளியேறும் சீன நிறுவனம்
புதுடில்லி-
சமூக ஊடக செயலி யான, டுவிட்டருக்கு மாற்றாக, இந்தியாவில் உருவெடுத்திருக்கும், ‘கூ’ செயலியின் தாய் நிறுவனத்திலிருந்து, சீன முதலீட்டு நிறுவனம் வெளியேறுகிறது.

இதனுடைய, 9 சதவீத பங்குகளை, பிற முதலீட்டாளர்கள் வாங்க இருக்கும் நிலையில், சீன நிறுவனம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.’கூ’ நிறுவனத்தின் தாய் நிறுவனம், ‘பாம்பினேட் டெக்னாலஜிஸ்’ என்பதாகும்.இந்நிறுவனத்தில், ஆக்சல் பார்ட்னர்ஸ், 3 ஒன் 4 கேப்பிட்டல், புளூமி வெஞ்சர்ஸ், கலாரி கேப்பிட்டல் ஆகியவை முதலீடு செய்துள்ளன.
அத்துடன் சீனாவை சேர்ந்த, உலகளவிலான துணிகர முதலீட்டு நிறுவனமான, ‘ஷன்வே’ நிறுவனமும் பாம்பினேட்டில் முதலீட்டாளராக உள்ளது. ‘ஷன்வே’, ‘பாம்பினேட்’டின் தயாரிப்பான, கேள்வி பதில்களுக்கான, ‘வோக்கல்’ எனும் செயலியில் முதலீட்டை மேற்கொண்டுள்ளது.இந்நிலையில், ‘பாம்பினேட்’ நிறுவனம், அதன் பிரதான வணிகத்தை விட்டுவிட்டு, ‘கூ’ பக்கம் பார்வையை திருப்பியதை அடுத்து, ‘ஷன்வே’ அதிலிருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறது.
‘ஷன்வே’, இந்தியாவில், ‘பாம்பினேட்’ நிறுவனத்தில் மட்டுமின்றி, வேறு பல நிறுவனங்களிலும் முதலீட்டை மேற்கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ‘கூ’ செயலி, இதுவரை கிட்டத்தட்ட, 30 கோடி ரூபாய்க்கும் மேல், முதலீட்டை திரட்டி இருக்கிறது. இச்செயலியை, 30 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர்.