–இந்திய வம்சாவளி பெண்மீது குற்றப்பதிவு!
சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன் (வயது40). இவரது வீட்டில் மியான்மர் நாட்டை சேர்ந்த பியாங்நகாய்டான் என்ற பெண் வேலைக்காரியாக கடந்த 2015- ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். ஏழ்மை காரணமாகவும், தனது 3 வயது மகனைக் காப்பாற்றவும் சிங்கப்பூரில் வீட்டு வேலைக்க்ச் சென்றார்.
இந்த நிலையில் வேலைக்கார பெண் பியாங்நகாய்டான் திடீரென்று இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது உடலில் 31 காய வடுக்கள், 47 வெளிப்புற காயங்கள் இருந்தன.
இதுகுறித்து காயத்ரி முருகையனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வேலைக்காரப் பெண்ணை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். பியாங் நகாய்டான் வீட்டு வேலைக்கு சேர்ந்து 5 மாதங்களுக்குப் பிறகு அவரை காய்த்ரி சித்ரவதை செய்யத் தொடங்கினார்.
பியாங்நகாய்டானுக்கு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டு அடித்து உதைத்தார். இதுபோன்று தினமும் பல்வேறு சித்ரவதை செய்துள்ளார். இதில் மூளையில் காயம் அடைந்து இறந்துள்ளார். இறக்கும் போது பியாங் நகாய்டான் உடல் எடை 24 கிலோவாக மட்டுமே இருந்தது.
அப்போது அவர் ஜன்னல் கம்பியில் கயிற்றால் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தார். இதையடுத்து காயத்ரியை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான 28 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் மீது 87 குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.