-இந்தியா – பாக்., பேச்சு
புதுடில்லி-
சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, பாகிஸ்தான், இந்தியா இடையேயான பேச்சு, டில்லியில், வரும், 23 – 24இல் நடக்க உள்ளது.
பாகிஸ்தான் – இந்தியா இடையே பாயும் நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து, 1960 இல், சிந்து நதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, மேற்கு பகுதியில் உள்ள சட்லஜ், பியாஸ், ரவி நதிகளில் பாயும் நீரை, இந்தியா முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம்.மேற்கு பகுதியில் பாயும் சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் பெரும் பகுதியை, பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா, மேற்கு பகுதியில் பாயும் நதிகளில், சில கட்டுப்பாடுகளுடன், நீர் மின் நிலையங்களை அமைத்து கொள்ளலாம். சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது, நீர் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக, இரு நாட்டிலும், சிந்து நதி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.
இரு தரப்பும், ஆண்டிற்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்தும்.இந்த சந்திப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், புதுடில்லியில் நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக, அது ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், 23 – 24 இல், டில்லியில் இந்த கூட்டம் நடக்க உள்ளது. இந்தியாவின் சிந்து நதி கமிஷனர், பி.கே.சக்சேனா தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் சிந்து நதி கமிஷனர், சையது முகமது மெஹர் அலி ஷா தலைமையிலான குழுவும் இதில் பங்கேற்க உள்ளது.