புவனேஸ்வர்: 2 கன்னியாஸ்திரிகள் ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.. அந்த நேரம் பார்த்து இந்து அமைப்பினர் உள்ளே நுழைந்து செய்த அட்டகாசத்தினால், பல தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வடமாநிலங்களில் தலித் மக்கள் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. அதிலும், ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் மீது கடுமையாக தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இதையெல்லாம் பலமுறை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். பாஜகவை குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனாலும், பிரதமர் மோடி இந்த சம்பவங்களுக்கு கண்டனம் மட்டும் தெரிவித்த நிலையில், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களே வடமாநிலங்களை ஆக்கிரமித்து இருக்கின்றன.
ஒடிஸா
இப்போதும் அதுபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஒடிஸாவை சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள் ரயிலில் சென்றுள்ளனர். அவர்களுடன் உதவியாளர்கள் 2 பேரும் வந்துள்ளனர். கடந்த 19ம் தேதி நிஜாமுதீன் பகுதியில் இருந்து ரூர்கேலாவுக்கு இவர்கள் ரயிலில் சென்றிருக்கிறார்கள்.
அப்போது இந்து அமைப்பினர் என்று சொல்லப்படும் ஏபிவிபி உறுப்பினர்கள் சிலர், இந்த கன்னியாஸ்த்ரிகளை பார்த்துவிட்டனர். அவர்கள் யாரையோ மத மாற்றம் செய்வதற்காகத்தான் செல்வதாக குற்றம் சாட்டி, அந்த ரயிலை விட்டு கீழே இறங்குமாறு சொல்லி உள்ளனர். இது வாக்குவாதமாக மாறி உள்ளது. இந்த சம்பவம் நடக்கும்போது, ரயில்வே போலீசாரும் அங்குதான் இருந்திருக்கிறார்.
கன்னியாஸ்திரிகள்
இப்படியே சிறிது நேரம் வாக்குவாதம் போயுள்ளது.. பிறகு, அந்த கன்னியாஸ்திரிகள் 2 பேரையும் அந்த கும்பல் ஜான்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியேற்றிவிட்டது. கன்னியாஸ்திரிகளை வெளியேற்றும் அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி பல தரப்புக்கும் அதிர்ச்சியை தந்தது. இந்த சம்பவத்தை பார்த்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட ஏராளமான தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.









