அறிவார்ந்த ஆசிரியமே புதிய தலைமுறையின் ஆக்கம் என்ற கருப்பொருளில் கொண்டாடப்படும் இன்றைய ஆசிரியர் தினத்தில் மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் சங்க உறுப்பினர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் சங்கத்தின் சார்பில் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளை சு. தமிழரசு தெரிவித்துக் கொண்டார்.
மாலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கம் 57ஆவது ஆண்டில் காலடி வைத்திருக்கிறது. சங்கம் அதன் வளர்ச்சிக்கும் சங்க உறுப்பினர்களின் பதவி உயர்வுக்கும் ஆசிரியர் பணிச்சுமையைக் குறைக்கவும் அவர்கள் எதிர்நோக்கும் பல சிக்கல்களைக் களையவும் அவ்வப்போது கல்வி அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய கோவிட்-19 சூழலில் ஆசிரியர்கள் இயங்கலை மூலமாக கற்றல் கற்பித்தலை நடத்துகின்றனர்.
அவர்களுக்கு வேண்டிய ஆதரவை சங்கம் வழங்கத் தவறியதில்லை. இக்காலகட்டத்தில் சங்க உறுப்பினர்கள் இந்தப் புதிய பரிணாம வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு இயங்கலை கற்றல் கற்பித்தலுக்குத் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாண்டு அறிவார்ந்த ஆசிரியம் புதிய தலைமுறையின் ஆக்கம் என்ற கருப்பொருளில் ஆசிரியர் தினம் கொண்டாட்டப்படுகிறது .
மாணவர்கள் இல்லாத ஆசிரியர் தினமா? என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழுகிறது. இருந்தபோதிலும் நாம் இதையும் கடந்து செல்லவேண்டும். இது காலத்தின் கட்டாயம். எதிர்காலத்தில், கல்வித் துறையில் பல மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. அதற்கு நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள இப்பொழுது இருந்தே தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் புதிய நடைமுறையில் புதிய பாணியில் கற்றல் கற்பித்தலை நடத்துவதோடு மட்டுமல்லாது மாணவர்களின் அடைவு நிலையைச் சோதனை செய்யவும் நமக்கு திறன்கள் தேவைப்படுகின்றன.
எனவே, புதிய சவாலை ஏற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாது எதிர்வரும் சவால்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஆகவே, நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வோம். மாணவர்களை மேம்படுத்துவோம். மாற்றத்தை ஏற்படுத்துவோம். நம்மை வளப்படுத்திக் கொள்வோம். தரமிக்க கற்பித்தல் மூலம் தரமான மாணவர்களை உருவாக்கி இந்த நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வோம். நமது நாட்டின் வளர்ச்சிக்கும் நமது பங்களிப்பாக அது அமையும் என்று தமிழரசு வலியுறுத்தினார்.
பி.ஆர். ஜெயசீலன்