-முதல்கட்ட பரிசோதனை வெற்றி
டெல் அவிவ்:
இஸ்ரேலில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட இஎக்ஸ்ஓ-சிடி 24 மருந்து முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. கொரோனாவால் மிதமான மற்றும் அதிகமாக பாதிக்கப்பட்ட நபர்கள் என 30 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 29 பேர், விரைவில் குணமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள இசிலோவ் மருத்துவ மையத்தில் பணியாற்றும் நதீர் அர்டேர் என்பவர், கொரோனாவுக்கு எதிராக இஎக்ஸ்ஓ-சிடி24 மருந்தை கண்டுபிடித்துள்ளார். முதல்கட்டமாக, இந்த மருந்து 30 பேருக்குக் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்கள் கொரோனாவால் மிதமான மற்றும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 29 பேர் 3 முதல் 5 நாட்களில் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், இந்த மருந்து, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மருத்துவமனை தெரிவித்து உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோயாளிகளின உடலில் எதிர்வினையை உண்டாக்குகிறது.
இதை மருத்துவர்கள் சைடோகைன் ஸ்டோர்ம் எனக்கூறுகின்றனர். இதனால், நோயாளிகள் உயிரிழக்கவும் அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர். இஎக்ஸ்ஓ-சிடி24 மருந்தானது,சைடோகைனுக்கு எதிராக, இஎக்ஸ்ஓ-சிடி 24 மருந்து செயல்படுகிறது.
இந்த மருந்தில் உள்ள, எக்சோசம்கள் மூலம் சிடி24 என்ற புரதத்தை நுரையீரலுக்கு வழங்குகிறது. செல்களின் மேல் இருக்கும் இந்த புரதங்கள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த புரதம் நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தி, சைடோகைனை கட்டுப்படுத்தி மரணம் தடுக்கப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்தினால், பக்க விளைவுகள் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து, இந்த மருந்து அடுத்த கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மருந்து, பயன்படுத்தப்படும் போது, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், முக்கிய பங்காற்றும் என மருத்துவமனை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.