புத்தம் போற்றுதும்
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் இன்று கொண்டாடப்பட இருக்கும் விசாக தினத்திற்கான எஸ்ஓபி விதிமுறைகளை தேசிய ஒற்றுமை அமைச்சுநேற்று வெளியிட்டது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ 3.0) காலகட்டத்தில் நடைபெறும் இக்கொண்டாட்டத்திற்கான எஸ்ஓபி விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமட் சாடிக் கேட்டுக் கொண்டார்.
அதே சமயத்தில் புதிய வழமையில் விசாக தினத்தைக் கொண்டாடும் மலேசியாவில் உள்ள பௌத்த சமயத்தினருக்கு அவர் தம்முடைய விசாக தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
எல்லா காலகட்டத்திலும் சுய தூய்மை, முகக்கவசம் அணிதல், கூடல் இடைவெளி நிபந்தனைகளைப் பின்பற்றி பாதுகாப்பைப் பேணும்படி அவர் அறிவுறுத்தினார்.
பௌத்த ஆலயங்களில் விசாக தினக் கொண்டாட்டங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தலைமைச் சாமி , 10 செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
காலை 6.00 மணியில் இருந்து பிற்பகல் 2.00 மணி வரை மட்டும்தான் பௌத்த ஆலயங்கள் அன்றைய தினம் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
புத்தர் சிலை அலங்கார வாகனங்கள் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை. மாநிலம், மாவட்டம் கடந்து இக்கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு அனுமதி இல்லை என்ற தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் முடிவுகளை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எஸ்ஓபி விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கு 1988 (சட்டம் 342) தொற்று நோய்க் கட்டுப்பாடு, தடுப்புச் சட்டம் பிரிவு 3 கீழ் ஒற்றுமைத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டு பௌத்த ஆலயங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவர் என்று டத்தோ ஹலிமா சொன்னார்.