சிக்கலில் மியான்மர் – அனைத்துலக உணவு அமைப்பு எச்சரிக்கை!
மியான்மரில் இன்றை மக்கள் பெருந்துன்பத்தில் இருக்கிறார்கள் என்று அனைத்துலக அமைப்பு கூறுகின்றது.
மியான்மரில் இப்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. ராணுவ ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ராணுவத்தை எதிர்க்கின்ற மக்கள் பழிவாங்கப்படுகின்றனர். தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. மக்களுக்கு வேலைவாய்ப்பில்லை. வருமானம் இல்லை உணவுத்தட்டுப்பாடு மிக அதிகமாகிவிட்டது. இரக்கமில்லாமல் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
மியான்மர் நாட்டில் ஆங் சாங் சூகி கட்சியின் ஆட்சி இருந்த நிலையில் அந்த ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது. ராணுவத்தை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து பொருட்களின் விலையும் மிக அதிகமாக உயர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்து விட்டனர். வங்கிகளில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து செலவழித்து வருகிறார்கள்.
பலருக்கு உணவு பொருட்கள் வாங்க கூட காசு இல்லை. இதனால் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டனர்.
இதே நிலை நீடித்தால் இன்னும் சில மாதங்களில் பெரும்பாலான மக்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும் என்று சர்வதேச உணவு அமைப்பு எச்சரித்துள்ளது.
கிராமப் பகுதிகளை விட நகரப்பகுதிகளில் மக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவிக்கிறார்கள். அரிசியை மட்டும் வாங்கி கஞ்சி காய்ச்சி அருந்துவதாகவும், காய்கறி வாங்க காசு இல்லை என்றும் மக்கள் பலர் கூறுகிறார்கள்.
ராணுவமும் மக்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்களை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறது. இதனால் மியான்மரில் இருக்கும் மக்களின் நிலை மிக மோசமாக உள்ளது.