-தண்ணீரில் மூழ்கியது
கடந்த 20-ஆம் தேதி, அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை நெருங்கியபோது, திடீரென கப்பல் தீப்பிடித்துக்கொண்டது. நைட்ரிக் ஆசிட் கசிந்ததால் தீவிபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. அந்த கப்பல், கொழும்பு துறைமுகத்துக்கு 9 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.
கப்பலில் இருந்த 25 சிப்பந்திகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியா 2 கப்பல்களை அனுப்பி வைத்தது. 11 நாட்களுக்குப் பிறகு, நேற்று முன்தினம் தீ அணைக்கப்பட்டது. கப்பல் கடலில் மூழ்கினால், சுற்றுச்சூழலுக்கு பெரும் சீர்கேடு ஏற்படும் என்பதால், கப்பலை இழுத்துச்சென்று ஆழ்கடலில் நிறுத்துமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்.
அதன்படி, மீட்புப்படையினர் நேற்றுக் காலை கப்பலில் ஏறி அதை இழுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.
அப்போது, கப்பலின் பின்பகுதி கடலில் மூழ்கத் தொடங்கியது. சில மணி நேரம் கழித்து பேட்டி அளித்த இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் இன்டிகா டி சில்வா, கப்பலின் மேல்தளம் முழுவதும் நீருக்கு அடியில் சென்று விட்டதாக தெரிவித்தார்.
கப்பலில் 325 மெட்ரிக் டன் எண்ணெய் இருக்கிறது. அது கடலில் கலந்து சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இலங்கை வரலாற்றில் இவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடு அபாயம் ஏற்பட்டதில்லை என்று அந்நாட்டு சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறினர்.
கப்பல் மூழ்கியதால் அப்பகுதிக்குள் மீன்பிடி படகுகள் நுழையவும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா தெரிவித்தார்.
தீவிபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. கப்பலில் பணியில் இருந்த ஓர் இந்திய அதிகாரி , 2 ரஷிய அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. அவர்களது பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளன.