லண்டன், ஒன்ராறியோ : கடந்த ஜூன் 6 அன்று ,கனடாவில் குடியேறி வசித்து வந்த பாகிஸ்தான் பின்னணியுடைய முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அவர்களது வீட்டிற்கு அருகே நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த போது, 20 வயது இளைஞன் (நதானியேல் வெல்ட்மேன்) வண்டியை வேகமாக செலுத்தி சென்று, அவர்கள்மீது மோதி கொலை செய்த துயர சம்பவம் கனடா மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. நதானியேல் வெல்ட்மேன் மத வெறுப்பால் தூண்டப்பட்டே இந்த தாக்குதலை நடத்தியதாக கனடிய போலீசார் தெரிவித்தனர்.
நேற்று மாலை (ஜூன் 8) இறந்த முஸ்லிம் குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒன்றுகூடிய பல ஆயிரக்கணக்கான மக்களுடன் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் சேர்ந்து, இறந்த முஸ்லிம் குடும்பத்தினரை நினைவுகூர்ந்ததுடன் தனது இரங்கலையும் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இது ஒரு பயங்கரவாத செயல் என குறிப்பிட்டார். மட்டுமின்றி, மிருகத்தனமான, கோழைத்தனமான, வெட்கக்கேடான வன்முறை செயல் என்றும் தெரிவித்தார்.
இதே கருத்தையே முதல்வர் டக் ஃபோர்டும் குறிப்பிட்டதுடன் இது போன்ற மத நம்பிக்கைக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு ஒன்ராறியோவில் இடமில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும், நாம் ஒன்றிணைந்த ஒரு சமூகம் என குறிப்பிட்டுள்ள அவர், இந்த இக்கட்டான சூழலில் தாம் முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.
-ராய்ட்டர்ஸ்