விழுங்கிய பின் காறித் துப்பிய திமிங்கலம்!

 மீனவர் வெளியே விழுந்தார்!

நான் செத்துப்பிழைச்சவண்டா என்று பலர் கூறியிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். அதில் எத்துணை உண்மை இருக்கிறது என்பதற்கு இவரே எடுத்துக்காட்டு!

அமெரிக்க மீனவர் ஒருவரை திமிங்கலம் ஒன்று விழுங்கியது. ஆனாலும் மீனவரை பின்னர் உயிரோடு வெளியே துப்பியது.

மைக்கேல் பக்காடு என்கிற அமெரிக்க மீனவர் லாப்ஸ்டர் எனப்படும் கடலின் ஆழத்தில் இருக்கும் நண்டை பிடிப்பதற்காக கடலில் குதித்துள்ளார். 35 அடி ஆழத்திற்குச் சென்று நீந்திக் கொண்டிருந்த அவரை ஹம்பக் வகை திமிங்கலம் ஒன்று எதிர்பாராவிதமாக விழுங்கியது.

30 விநாடிகள் திமிங்கலத்தின் வாயில் சிக்கி என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், தனக்கே உரித்தான பாணியில் கடலுக்கு மேலே எகிறி குதித்த திமிங்கலம், அவரை காறித் துப்பியது. துப்பிய வேகத்தில் பறந்துபோய் கடலின் மேற்பரப்பில் விழுந்தார் மீனவரான மைக்கேல், பின்னர் கரைக்கு வந்து சேர்ந்தார்.

இதனால் அவருக்கு எலும்பு முறிவோ, பெரிய காயங்களோ ஏற்படவில்லை. ஆங்காங்கே சிறிய காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மெசச்சுசஸ்ட் திமிங்கல ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகையில், பொதுவாக திமிங்கலங்கள் வாயை நன்றாக திறந்தபடி நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கும். குழுவாக வரும் மீன்களை அப்படியே லபக் என்று கபளீகரம் செய்துவிடும்.

இவ்வாறு திமிங்கலம் தனது உணவைத் தேடும். திமிங்கலம் சென்ற நேர்கோட்டில் மைக்கேல் சிக்கிக்கொண்டார். பிறகு திமிங்கலம் என்ன நினைத்ததோ, அதிர்ஷ்டவசமாக அவரைத் துப்பிவிட்டது எனக் கூறியுள்ளனர்.

கொரோனா காலத்தில்  திமிங்கலத்திற்கும்  அச்சம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here