குற்றவாளிகளின் சொகுசு கூடாரமா நேபாள்?

அப்படி என்ன தான் இருக்குதோ!
ஆன்மீகம், மடம், பெண்கள், வீடியோ இந்த வார்த்தைகளை எல்லாம் கோர்த்துப் பார்த்தால் முதலில் நினைவுக்கு வருபவர் சாமியார் நித்யானந்தா.

ஒரு காலத்தில் தனது லீலைகளால் பிரபலமான நித்யானந்தா போலீஸ் தன்னை நெருங்குவதை உணர்ந்து தப்பியோடிய முதல் இடம் நேபாளம் தான். 10, 15 ஆண்டுகள் கழித்து இன்று சாமியார் சிவசங்கர் பாபா தேர்ந்தெடுத்த பதுங்கிடமும் நேபாளம் தான். அதென்ன தேடப்படும் குற்றவாளிகள் எல்லோருமே நேபாளத்துக்கு போறாங்க? அப்படீன்னு கேட்கிறீங்களா? காரணாம் இருக்கு.

இமயமலையை அரணாகக் கொண்ட எழில் கொஞ்சும் நேபாளம் ஆன்மீகத் தலமாகவும் இருக்கிறது. நேபாள பொருளாதாரத்துக்கு சுற்றுலா துறை தான் பெரும் பங்களிப்பைச் செய்கிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற சிறிய நாடுகளில் குற்றவாளிகளின் முதல் தேர்வாக நேபாளம் இருக்கிறது. காரணம், இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளைவிட நேபாளத்திற்கு செல்வதென்பது மிகவும் சுலபமான விஷயம்.

தீவிரவாதம் மலிந்த நாடுதானே அங்கு யார் வேண்டுமானால் போகலாம் வரலாம் என்று நினைத்தெல்லாம் பாகிஸ்தானில் நுழைந்துவிட முடியாது. முறையான ஆவணங்கள் இருந்தாலும்கூட பாகிஸ்தான் செல்வது என்பது அசாத்தியமானது. அதேபோல், இலங்கைக்கு தப்பலாம் என்றால் கடல் வழியில் செல்வதில் மிகப்பெரிய ரிஸ்க் இருக்கிறது.

ஒருவேளை கடலோர காவற்படை கண்காணிப்பில் சிக்காமல் சென்றுவிட்டாலும் கூட இலங்கையிலிருந்து வேறு நாட்டிற்கு செல்வது மிகமிகக் கடினம்.

மற்றொரு குட்டி நாடான திபத்திற்கு செல்ல வேண்டுமென்றால் சாலை வழியிலேயே பயணம் செய்யவேண்டும். அந்தப் பயணம் தப்பியோடுபவர்களுக்கு மிகவும் அசெளகரியமானது. சிரமமானது. மீதம் இருக்கக்கூடியது நேபாளம்தான். நேபாளத்திற்கு சாலை வழியாக மிகச் சுலபமாக சென்றுவிட முடியும் என்கின்றனர்.

6 வழிகள்; ஆன்மீக உடை போதும்..

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ஆறு முக்கிய வழிகள் இருக்கின்றன. அதிலும் குற்றவாளிகள் முதலில் தேர்ந்தெடுப்பது உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் வழியாக செல்லும் பயணமே.

கோரக்பூரில் இருந்து காரிலேயே நேபாள எல்லைக்குச் சென்றுவிடலாமாம். அதுவும் வெறும் சில நூறு ரூபாய் செலவில். தப்பிக்க தலை தெறிக்க ஓடும் வேகத்தில் இதுவல்லவா பெரும் சலுகை என்று அக்யூஸ்டு எல்லோரும் நேபாளத்துக்குப் படையெடுத்துவிடுகின்றனர்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. நேபாளம் ஆன்மீக பூமி என்று அறியப்படுகிறது. அதனால் சாமியார் கெட்டப்பில் செல்வோரை எல்லையில் பெரிதாக சோதனை செய்யமாட்டார்களாம். அப்புறம் சென்னைக்கு மிகமிக அருகில் என்று ரியல் எஸ்டேட்காரர்கள் கூறுவதுபோல் இந்தியாவிலிருந்து நேபாள எல்லையும் அப்படித்தான் இருக்கிறது.

வேறு ஒரு நாடு போல் இல்லாமல் மாநில எல்லை போலவே செயல்படுகிறது. அங்கிருந்து அத்தியாவசியப் பொருட்கள் இங்கு டிரக்குகளில் வருவதும், இங்கிருந்து கட்டுமானப் பொருட்கள் அங்கு கொண்டு செல்லப்படுவதும் ஏதோ அம்பத்தூரிலிருந்து அமைந்தகரைக்குக் கொண்டு செல்லப்படுவதுபோலவே நடக்கிறது.

இந்தியர்களின் பாஸ்போர்ட்டையும் பரிசோதனை செய்வதில்லை. இத்தனை சலுகைகள் இருக்கும்போது கையில வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன் என்று அக்யூஸ்டுகள் நேரடியாக நேபாளத்துக்குப் படையெடுத்து விடுகின்றனர்.

கொஞ்சம் இருகுகிறது பிடி..

நேபாளத்திலிருந்து பிறநாடுகள் செல்வதும் எளிதாக இருக்கிறது. நேபாளத்திலிருந்து ‘அரைவ் ஆன் விசா’ மூலம் செல்லக்கூடிய நாடுகளுக்கு சுலபமாக தப்பித்துவிட முடியும்.

இப்படித்தான் சிவசங்கர் பாபாவும் திட்டமிட்டு நேபாளம் சென்றார் ஆனால் ஏதோ காரணத்துக்காக காசியாபாத் வந்த அவரை போலீஸார் பொறிவைத்துப் பிடித்துவிட்டனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா நேபாளம் இடையே எல்லைப் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களால், இந்தியர் ஒருவர் சுடப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு இருநாடுகளும் எல்லைகளைப் பலப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இருந்தாலும், குற்றவாளிகள் இந்தியாவில் இருந்து தப்பிக்க சுலபமாக கருதும் நாடாகத்தான் தொடர்ந்து நேபாளம் இருந்து வருகிறது.

அதாவது , குற்றவாளிகளின் கும் மாள இடம் நேபாள் என்றாகிவிட்டது என்பதுதான் பலரின் நினைப்பாக  இருக்கிறது போலும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here