புடின் –ஜோ சந்திப்பில் மாற்றம் வருமா!
பகைமை ஒன்று சேரும்போது ஒரு பாசிட்டிவ் தன்மை உருவாகும் என்று கூறுவதை மெய்ப்பித்துக் காட்டியிருக்கின்றனர் இரு வல்லரசுகளின் தலைவர்கள். தூரத்துப் பச்சைகள் உண்மை கூறாது. நெருங்கினால் மட்டுமே உண்மை புரியும்!
அதிலும் பேச்சு என்ற ஒன்று உருவானால் அதில்தான் உண்மை நிலை தெரியும் !
தற்போதைய சூழலில் ரஷ்யா மீண்டும் ஒரு பனிப்போரை விரும்பவில்லை என்பது பேச்சில் முதன்மையாக வெளிப்பட்டிருக்கிறது.
ரஷ்ய அதிபர் புதினுடன் நடைபெற்ற சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும் அவர் புதிய பனிப்போரை விரும்பவில்லை என்றே தான் கருதுவதாகவும் அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார்.
உலகின் இருபெரும் வல்லரசு நாட்டின் தலைவர்களான அமெரிக்க அதிபர் பைடன் , ரஷ்யா அதிபர் விளாடிமர் புதின் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதின், இந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஜோ பைடன் தன்னை வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்களைச் சந்தித்த பிறகு அமெரிக்க அதிபர் பைடனும் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இந்த ஆலோசனைக் கூட்டம் மொத்தம் நான்கு மணி நேரம் நடைபெற்றிருக்கும் என்று நினைக்கிறேன், மிகவும் சிறப்பாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
பாசிட்டிவான ஒரு ஆலோசனை நடைபெற்றது. இதில் எந்தவொரு முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் கூறிய சிலவற்றுக்கு நாங்கள் உடன்படவில்லை. நான் கூறிய சிலவற்றுக்கு அவர்கள் உடன்படவில்லை. ஆனாலும், சுமுகமாகவே பேச்சுவார்த்தை சென்றது.
அமெரிக்காவிடம் உள்ள சிறப்பான சைபர் திறனை நான் அவரிடம் சுட்டிக்காட்டினேன், அது அவருக்கும் தெளிவாகத் தெரியும். அவர்கள் எல்லை மீறினால் நாங்கள் அதற்குப் பதிலடி கொடுப்போம், சைபர் உலகம் குறித்து அவருக்குத் தெளிவாகத் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.