பெருவில் நடந்த பேருந்து விபத்தில் 27 பேர் பலி 13 பேர் படுகாயம்

பெரு (ஜூன் 20) : பெரு நாட்டின் தெற்கு பகுதியில் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் படு காயமடைந்துள்ளனர்.

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் அயாகுசோ நகரில் இருந்து ஆரேக்விபா நோக்கி 50 சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு குறித்த பேருந்து சென்ற வேளை இவ்விபத்து ஏற்பட்டதாக சுரங்க நிறுவனம் ( ஜூன் 18) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன்18), அதிகாலை 3 மணியளவில் அந்த பேருந்து பெருவியன் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென 250 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு சென்று விபத்தில் இறந்தவர்களது சடலங்களையும், காயமடைந்தவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 13 பேரையும் நாஸ்கா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், இந்த விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. என்றாலும், புவியியல் நிலைமைகள் காரணமாக பெருவில் உள்ள நெடுஞ்சாலைகள் இப்பகுதியில் மிகவும் ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் 3,000 க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர் என்று தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here