வன்கூவார், கனடா, (ஜூலை 3):
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் ஒரே வாரத்தில் 719 பேர் வெப்ப அலைக்கு பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வெப்பம் கடந்த காலங்களை விட மூன்று மடங்கு அதிகம் என்பதையும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதன்மை உடற்கூராய்வாளர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பெரும்பாலான மக்கள் வெப்ப அலை காரணமாகவே இறந்துள்ளதாக உறுதி செய்துள்ளனர்.
இதனிடையே அம்மாகாணத்தின் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. 24 மணி நேரமும் இயங்க வேண்டியவர்கள், செயலில் இல்லை என்றும், பல மணி நேரம் ஆம்புலன்ஸ் சேவையை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமின்றி தீயணைப்பு வீரர்களின் உதவியை நாடி பலர் அவர்களின் அலுவலகங்களுக்கே செல்லும் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஜூலை 1) அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கான முதன்மை அதிகாரி இவ்விடயம் தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.