இளைஞன் மீது தாக்குதல்! முல்லைத்தீவில் திடீர் பதற்றம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு போலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது
ஆனந்தபுரம் பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு செல்வதற்காக இரணைப்பாலை சந்திக்குச் சென்ற இளைஞர் ஒருவர் மாஸ்க் அணிந்து செல்ல மறந்டுவிட்ட நிலையில், மாஸ்க் அணிந்து செல்லுமாறு கூறி இராணுவ சிப்பாய் ஒருவர் அவ்விளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகின்றது.
குறித்த இளைஞர் மீது இராணுவச் சிப்பாய் தாக்குதல் நடத்திய நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்று கூடி இராணுவத்தினருடன் முரண்பட்டனர்.
மாஸ்க் அணியாத காரணத்தால் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முடியுமா? என்ற வாதம் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு போலிசார் மக்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட இளைஞன் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும் அனுமதித்தனர். பின்னர் அவ்விளைஞர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றார்.
புதுக்குடியிருப்பு போலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







