சிங்கப்பூர் ,ஜூலை 8:
சிங்கப்பூரின் கட்டுமானம், கடல்துறை, செய்முறைத் தொழில்துறை ஆகிய துறைகளின் முன்னோட்டத்தின்கீழ் இம்மாதத்தில் இருந்து இந்திய ஊழியர்கள் ‘சிறிய அளவில்’ சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவர்.
இம்முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், பாதுகாப்பாகவும் சீரான அளவிலும் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்குள் வருவதற்கு அந்த முறை பயன்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம், சிங்கப்பூர் கடல்துறை நிறுவனங்கள் சங்கம், செய்முறைத் தொழில்துறைச் சங்கம் ஆகியவை இன்று ஓர் கூட்டறிக்கை மூலமாகத் தெரிவித்தன.
அந்த முன்னோட்டத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் இருந்து வந்த சில தொகுதி ஊழியர்கள் அனைவரையும் கோவிட்-19 தொற்று பரவாததை அடுத்து இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
குறித்த ஊழியர்கள் சிங்கப்பூர் வந்தடைந்ததும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நடப்பிலுள்ள சுகாதார நெறிமுறைகளுக்கும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கும் அவர்கள் உட்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் கடுமையான நெருக்கடிகளைத் குறைக்கும் விதமாக, அதிகமான வெளிநாட்டு ஊழியர்களும் இல்லப் பணிப்பெண்களும் சிங்கப்பூர் வர விரைவில் அனுமதிக்கப்படுவர் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கடந்த மாதம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.