கோலாலம்பூர்:
எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தைச் சுமந்து சென்ற லோரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ரயில் தண்டவாளத்திற்கு அருகே விபத்துக்குள்ளானதை அடுத்து, கூலாய் – கெம்பாஸ் (Kulai–Kempas) பாதையிலான ‘ஷட்டில் செலாத்தான்’ மற்றும் ETS மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தினால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைபட்டதைத் தொடர்ந்து, சுத்தம் செய்யும் பணிகளும் மின்சார மறுசீரமைப்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக KTMB நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ETS ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதியாக குலாய், கெம்பாஸ் பாரு மற்றும் JB சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் மாற்று ஷட்டில் பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
‘ஷட்டில் செலாத்தான்’ பயணிகள் தற்போதைக்கு மாற்றுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பயணிகளுக்குச் சட்டப்படியான கட்டணச் சரிசெய்தல் வழங்கப்படும்.
நேற்றிரவு நிலவரப்படி, ETS9449 ரயில் 32 நிமிடங்களும், ETS9533 ரயில் 55 நிமிடங்களும் தாமதமாக இயங்கின.
இந்த எதிர்பாராத அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள KTMB, மேலதிக உதவிகள் தேவைப்படும் பயணிகள் அங்குள்ள ரயில் நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.























