அந்த கண்ணீரின் அர்த்தம் நட்பின் ஆழம்!

 மிரண்டு போன அதிமுக! 

சென்னை:

விஜயகாந்த் – ஸ்டாலினின் சந்திப்பு உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அமமுக கூட்டணி, அதிமுக கூட்டணியின் நிலைப்பாடுகள் என்ன என்பதற்கான கேள்விகளும் எழுகிறது.

வழக்கமாகவே விஜயகாந்த் என்றாலே ஸ்டாலினுக்கு மிகவும் பிடிக்கும். அரசியலையும் தாண்டி அபரிமிதமான பாசத்தை விஜயகாந்த் மீது வைத்திருப்பவர் முதல்வர் ஸ்டாலின்.

இந்த 5 வருடங்களாக திமுகவை, பிரேமலதாவும், விஜயபிரபாகரனும் பேசாத பேச்சில்லை, கேட்காத கேள்வியில்லை. ஆனாலும் எதையுமே ஸ்டாலின் மனசில் வைத்து கொள்ளவில்லை.

இந்த 2 மாத காலத்தில், 3 முறை விஜயகாந்த்திடம் பேசிவிட்டார் ஸ்டாலின்.. ஆஸ்பத்திரியில் டாக்டர்களிடம், “என் நண்பனுக்கு உடல்நிலை எப்படி இருக்கு? சிறப்பான சிகிச்சையை தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டவர், போனில் உடல்நலம் குறித்து அக்கறையாக விசாரித்தவர், இப்படிப்பட்ட சூழலில்தான் இன்னொரு முறை சந்திப்பு நேற்றைய தினம் நடந்துள்ளது.

ஆனாலும் இது அரசியல் ரீதியான சந்திப்பாகவே கருதப்படுகிறது. காரணம், கூடவே துரைமுருகன் சென்றுள்ளார்.

துரைமுருகன் இருந்தாலே அது கூட்டணிதான் என்று அர்த்தம் கொள்ளப்படும். கடந்த எம்பி தேர்தலின்போதே மிஸ் ஆகிவிட்டது. இந்த முறையும் ஸ்டாலின் விருப்பமாகத்தான் இருந்தார். சுதீஷூக்கும் அந்த எண்ணம் இருந்தது. ஆனால், பிரேமலதா மறுத்துவிட்டார். இப்போது மீண்டும் கூட்டணி கூடி வருவதுபோல தெரிகிறது. இதற்கு 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதல் காரணம், திமுகவுக்கு தேமுதிகவின் தேவை ஓரளவு ஏற்பட்டுள்ளது.. காரணம், நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலில் 9 இடங்களில் 7 தொகுதிகள் வட மாவட்டங்களில் உள்ளன. இவைகளில் பாமக கோலோச்சி கொண்டிருக்கிறது. இதே வட மாவட்டங்களில் தேமுதிகவுக்கும் செல்வாக்கு உள்ளது. வேல்முருகன் துணைக்கு இருந்தாலும், விஜயகாந்த்தின் ஆதரவும் தேவையாகிறது. அதனால், கூட்டணி வைக்க திமுக விரும்புவதாக தெரிகிறது.

இரண்டாவது காரணம், தேமுதிகவுக்கே இப்போது இதைவிட்டால் வேறு இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. தினகரனை நம்பி பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. தினகரனாலேயே வெற்றி பெற முடியாத சூழல்தான் ஏற்பட்டது.

அதனால் திமுகவை இந்த முறையும் நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, அப்படி கூட்டணி அமைக்கும்பட்சத்தில், 7 தொகுதிகளில் ஒரு மேயர் பதவியையும் கேட்க தேமுதிக யோசித்து வருவதாக தெரிகிறது. ஒருவேளை கூட்டணி வைக்கும் பட்சத்தில், தேமுதிகவுக்கு இது ஓர் உற்சாக டானிக்காகவே இருக்கும்.

அமமுக கூட்டணியில் தேமுதிக இருந்தாலும், இனி அதனால் பெரிய பலன் எதுவும் கிட்ட போவதில்லை.. அமமுகவுக்கு ஓட்டு வங்கி 5- இல் இருந்து இரண்டரையாக குறைந்துவிட்டது. மேலும், சசிகலாவை நம்பிக்கொண்டும், அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தினகரன் இருப்பதாக தெரிகிறது. அதனால், தேமுதிக திமுகவுடன் சென்றாலும் அதை தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பும் குறைவுதான்.

அதேசமயம், பாமகவுக்கு இது நெருக்கடியை தந்துள்ளது.. வடமாவட்டத்தை விட்டால் பாமகவுக்கு தமிழ்நாட்டில் வலு இல்லை.. அதிமுகவின் செல்வாக்கும் வாக்கும் சற்று சரிந்து போனதுக்கு காரணமே வன்னியர் இடஒதுக்கீடுதான். அதற்கான கோபம் வடமாவட்டங்களில் இன்னும் உள்ளது. அப்படி இருக்கும்போது, இந்த முறையும் அதிமுக கூட்டணியை வடமாநில மக்கள் அங்கீகரிப்பார்களா என்பது சந்தேகம்தான்.

முதல்வராகப் பொறுப்பேற்றதும், ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க 2 மாதத்துக்கு முன்பு சுதீஷூம், விஜயபிரபாகரனும் வந்திருந்த போது, ஸ்டாலினின் அணுகுமுறையை பார்த்து அசந்துபோய்விட்டதாகவும், வீட்டிற்கு சென்று ஸ்டாலின் தங்களை நடத்திய விதத்தையும், உபசரிப்பையும் சொல்லி சொல்லி நெகிழ்ந்துள்ளனர்.

அப்போதே விஜயகாந்த் கலங்கிவிட்டாராம். அப்போது மட்டுமல்ல, ஸ்டாலின் போனில் எப்போது போனில் பேசினாலும், விஜயகாந்த் கண்ணீரையே அன்பின் நெகிழ்ச்சியாக உதிர்த்துவிடுவார்.. நேத்து ஸ்டாலினை பார்த்ததுமே, பூரிப்பால் கலங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை நடந்த அரசியல் கூட்டணிகளுக்காக மனம் வருந்திய கண்ணீராகவும் அது கருதப்படுகிறது.. விஜயகாந்த் கலங்கியதுமே ஸ்டாலினும் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டாராம்.

ஆழ்மனசு நட்பின் வெளிப்பாடு இது என்றாலும், கூட்டணிக்கான அச்சாரமாகவே இந்த சமயத்தில் எடுத்து கொள்ளப்படுகிறது. காரணம், பக்கத்திலேயே துரைமுருகன் உட்கார்ந்திருந்ததுதான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here