நூதன போர்டு- வரவேற்பு கூடுகிறது!
பெற்றோர் சம்மதிக்காததால் வீட்டை விட்டு வெளியே வரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என ஹரியானா மாநிலத்தில் உள்ள கடையில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
என்னதான் நாகரிகம், தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் சாதி, மதம் காரணமாக காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பது தொடரத்தான் செய்கிறது. அப்படி பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறும் ஜோடிகளுக்கு உதவி செய்வதற்காக தான் இப்படி ஒரு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் பஞ்குலா பகுதியில் ஒரு கடை அமைந்துள்ளது. அந்த கடைக்கு சென்று காதல் ஜோடிகள் திருமணம் செய்ய வேண்டும் என கூறினால், அவர்களுக்கான, திருமண ஆடை , தாலி , போட்டோகிராப் , திருமணப்பதிவு , வழக்கறிஞர் செலவு என அனைத்தும் செய்து தரப்படுகிறது .
ரூ. 5,100 முதல் ரூ.16,000 வரை ஜோடிகளின் விருப்பத்திற்கு ஏற்ப பேக்கேஜ்கள் உள்ளன. இவை அனைத்தும் 2 நாட்களில் ஏற்பாடு செய்யப்படும். இந்த கடையின் மூலம் தற்போது 70-80 திருமணங்கள் மாதத்திற்கு நடக்கின்றனவாம்.
திருமணம் செய்பவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தால் நீதிமன்றத்தில் ஆஜராகி இவர்களுக்கு பாதுகாப்பு பெற்றுத் தருவது வரை இந்த கடைக்காரர்கள் செய்கிறார்கள்.
கமெண்ட்: இப்படியாவது சாதிக்கு முற்றுப்புள்ளி வருமா? காதலுக்கு மரியாதை கிடைக்குமா? காதல் தற்கொலைகளுக்கு இதுதான் சிறந்த வழியாக இருக்குமா?
கவனியுங்கள் பெற்றோர்களே!