இணையவழி இசை நிகழ்ச்சி

எளியவர்களுக்கு உதவும் சகஸ்ரரா

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் காலத்தில் தங்களின் இசைத் திறமையின் மூலம் இணையவழியில் பாடல்களைப் பாடி தங்களின் மனப் பதற்றத்தையும், கேட்பவர்களின் மனப் பதற்றத்தையும் குறைத்துக் கொண்டவர்கள் பலர்.

ஆனால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் இசைக் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தன்னுடைய இசைத் திறமையின் மூலமாகத் தன்னால் முடிந்த உதவியைக் கடந்த இரண்டு ஊரடங்கு காலத்திலும் செய்துமுடித்திருக்கிறார் பின்னணிப் பாடகி ரம்யா துரைசாமி.

மெல்லிசைப் பாடகி, பக்திப் பாடல்கள், விளம்பரப் பாடல்களைப் பாடுவதில் நிபுணத்துவம், பெற்றவர் இவர். இவை தவிர நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு.

டாக்டர் எஸ்.பி.பி., சித்ராவோடு இணைந்து உலகின் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறார். மனோ, அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட பல கலைஞர்களுடன் இணைந்து மேடைகளில் பாடியிருக்கும் ரம்யாவிடம் அவரின் இணையவழி இசை நிகழ்ச்சிகளைக் குறித்தும் அதன்மூலம் இசைக் கலைஞர்களுக்கு அவர் செய்த உதவிகள் குறித்தும் கேட்டோம்.

‘இணைய வழியில் எட்டு லைவ் ஷோக்களைச் செய்திருக்கிறேன். கடந்த ஊரடங்கின்போது முகநூலில் மட்டும் இந்த நிகழ்ச்சியைச் செய்தேன். தற்போது கொரோனா இரண்டாம் ஊரடங்கின்போது, முகநூல், யூடியூப் இரண்டிலும் நிகழ்ச்சியைச் செய்தேன். எட்டு நிகழ்ச்சிகளின் மூலம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை வறுமையில் இருக்கும் இசைக் கலைஞர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மெல்லிசைக் குழுக்களை நீண்ட காலம் நடத்திக்கொண்டும், இசைத் துறையில் நீண்ட காலம் அனுபவம் பெற்றிருக்கும் சிலரின் மூலமாக உண்மையான பயனாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்த உதவியை அளிப்பதை உறுதி செய்கிறோம். கடந்த ஆண்டு நடத்திய நிகழ்ச்சிகளின் மூலம் மூன்று லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டு 260 இசைக் கலைஞர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இசைக் கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணத்தில்தான் இந்தத் தனிநபர் இசை நிகழ்ச்சிகளை கரோகி டிராக் உதவியோடு பாடினேன். இதில் கிடைத்த தொகை உள்பட எல்லா விவரங்களையும் என்னுடைய முகநூல் பக்கத்தில் வெளிப்படையாகப் பதிவிட்டிருக்கிறேன். ஏதோ என்னால் முடிந்த உதவியை இசைக் கலைஞர்களுக்குச் செய்த திருப்தி எனக்கு ஏற்பட்டிருக்கிறது’ என்றார்.

இயக்குநர் அமீர் தயாரித்திருக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் பின்னணி பாடியிருக்கும் ரம்யா, ஆயிரம் இதழ் விரிக்கும் தாமரை என்னும் அர்த்தத்தைச் சொல்லும் ‘சகஸ்ரரா‘ என்னும் இசைக் குழுவின் மூலம் பல்வேறு பாணியில் இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்.

இசைக் கலைஞர்களின் துணையோடு லைவ் நிகழ்ச்சியை நடத்துவது, கரோகி டிராக் மூலமாக இணையவழியில் இசை நிகழ்ச்சி அளிப்பது, ராகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்களை வகை பிரித்து அதன் சுவை மாறாமல் ரசிகர்களுக்குக் கொடுப்பது, அந்தக் கால மெல்லிசை மன்னரின் பாடல்கள், இசையில் பல புதுமைகளைப் புகுத்திய இளையராஜாவின் பாடல்கள், இந்தியாவில் இசைப் புயலாக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் என அந்தப் பாடல்களில் வெளிப்படும் இனிமை மாறாமல் ரசிகர்களின் காதுகளுக்கு இசை விருந்து அளிப்பது போன்றவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறது ரம்யாவின் ஆயிரம் இதழ் விரிக்கும் தாமரையான சகஸ்ரரா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here