ஊழியருக்காக ஒருநாள் விடுமுறை அறிவித்த உணவக உரிமையாளர்..!

 கண்ணீர் சிந்த விடமாட்டோம்..

ஓட்டல்கள் வார விடுமுறை விடலாம், இல்லை ஏதோ அசம்பாவிதம் என்றால் விடலாம். கொரோனா காலத்தில் அடிக்கடி ஊரடங்கால் விடுமுறை அமையலாம். ஆனால், அமெரிக்காவில் ஓர் உணவகம் தனது ஊழியருக்கு துணை நிற்கும் விதமாக ஒரு நாள் விடுமுறை விட்டுள்ளது. சமூக வலைதளங்களில் நாம் உலாவும் போது அன்பு, நேசம், காதல், கோபம், விரக்தி, வெறுப்பு என எல்லா வகையிலான உணர்வுக்ளைப் பிரதிபலிக்கும் போஸ்ட்டுகளைக் காணலாம்.

அந்த வகையில் அமெரிக்காவின் மாசசுசட்ஸ் மாகாணத்தில் அண்மையில் ஓர் உணவகம் பதிவிட்ட போஸ்ட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

Apt Cape Cod ஆப்ட் கேப் காட் என்ற அந்த உணவத்திற்கு அதன் உரிமையாளர் ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளார். அதிலென்ன இருக்கிறது எனக் கேட்கலாம். விடுமுறை புதிதல்ல. விடுமுறைக்கான காரணம் புதிது. அவர் தனது உணவகம் வாயிலில் இன்று கடை விடுமுறை. இது அன்பைக் காட்டும் நாள். எனது கடை ஊழியரை வாடிக்கையாளர் ஒருவர் இழிவுபடுத்திவிட்டார். அவர் கண்ணீர் சிந்திவிட்டார். அவருக்கு ஆறுதல் கூற இன்று விடுமுறை என எழுதி வைத்திருந்தார்.

கடையின் உரிமையாளர்களான பிராண்டி ஃபெல்ட் கேஸ்டெலானோ மற்றும் ரெஜினா கேஸ்டெலானோ ஆகியோர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தங்கள் உணவகத்தில் ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவொன்று இட்டுள்ளனர்.

அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்ட் கேப் காட் இன்று காலை இயங்காது. நாங்கள் மாலை 5 மணியளவில் கடையைத் திறப்போம். எங்கள் வாடிக்கையாளர்கள் பலரும் எங்களை அன்புடன் தான் நடத்துகின்றனர்.

எங்களைப் புரிந்துகொண்டு பழகுகின்றனர். ஆனால், அன்றாடம் நிறைய பேர் எங்களை பழித்துப் பேசுகின்றனர். சிறு விஷயத்துக்கும் கூட வழக்கு தொடர்வோம் என்று மிரட்டுகின்றனர். வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். எங்களின் கடை ஊழியர்களிடம் கத்தி கோபமாக நடந்து கொள்கின்றனர்.

இதனால் சில ஊழியர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சக மனிதரை இப்படி நடத்தக்கூடாது. இதனால் நானும் ரெஜினாவும் சேர்ந்து இன்று எங்களின் உணவகத்திற்கு விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளோம்.

இன்றைய தினம் உணவகத்தை சுத்தப்படுத்தவும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அவர்களுக்கு ஆறுதலாக நின்று அன்பு செலுத்தவும் பயன்படுத்தப்படும்.

தயவு செய்து ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். எங்களின் ஊழியர்கள் பலரும் மிகவும் இளம் வயதினர். பலருக்கு இதுவே முதல் வேலை. பலர், கோடை விடுமுறை வேலையாக இதைச் செய்கின்றனர். இதன் மூலம் தங்களின் கல்லூரி கட்டணத்தைச் செலுத்துவதற்காக அவர்கள் வேலையில் சேர்ந்துள்ளனர்.

நாங்கள் இங்கு வரும் எந்த ஒரு வாடிக்கையாளரின் விடுமுறை நாளையும் கெடுக்க நினைக்கவில்லை. மாறாக இளைஞர்களுக்கு, புதியவர்களுக்கு வேலை கொடுக்க விரும்புகிறோம். எங்களின் வாடிக்கையளர்கள் அதிகரித்துள்ளதால் நிறைய சமைக்க வேண்டியுள்ளதால் புதியவர்களை வேலைக்குச் சேர்த்துள்ளோம். சக மனிதரை கண்ணீர் சிந்த வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த போஸ்டுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸும் ஆயிரக்கணக்கில் பின்னூட்டமும் குவிந்து வருகிறது. பலரும் தங்களுக்கு Apt Cape Cod ஆப்ட் கேப் காட் உணவகத்தில் நல்ல அனுபவமே எப்போதும் கிடைத்ததாகக் கூறியுள்ளனர்.

ஒரு வாடிக்கையாளரின் பின்னூட்டமும் கவனம் பெற்றுள்ளது. அந்த வாடிக்கையாளர், “இதைக் கேட்கவே எனக்கு வருத்தமாக இருக்கிறது. நாங்கள் ஆப்ட் கேப் காட் உணவகத்திற்கு காலை உணவுக்காக மூன்று முறை வந்துள்ளோம்.

அங்கு எங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. உங்களின் ஊழியர்கள் அனைவரும் கனிவானவர்கள். உங்கள் ஓட்டலின் உணவு சுவையாக இருந்தது. ஒருவேளை உணவு நன்றாக அமையாமல் போய் இருந்தாலும் கூட கடினமாகவோ அன்பற்றவராகவோ நாங்கள் நடந்து கொண்டிருக்க மாட்டோம்.

ஆனாலும் நம் நாட்டில் இத்தகையோர் இருப்பது அவமானப்பட வேண்டியது. உங்கள் ஊழியர்களுக்கு அன்பின் வழி நின்று நீங்கள் விடுமுறை அளித்திருபப்து அற்புதமான செயல்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here