ஒலிம்பிக்கில் இந்தியாவின் தீபிகா குமாரி
விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பான ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் இன்று தொடங்கியது.
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளான இன்று நடைபெறும் தகுதிநிலை தரவரிசை சுற்றில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
அந்தவகையில், வில்வித்தைப் போட்டிக்கான தகுதிநிலை சுற்று அதிகாலை ஐந்தரை மணிக்கு தொடங்கியது. இதில் தனிநபருக்கான மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி பங்கேற்றார். இப்போட்டியில் மொத்தம் 64 பேர் கலந்து கொண்டார்கள்.
இதில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 663 புள்ளிகள் பெற்று 9ஆவது இடத்தை பிடித்தார். அவர் 30 முறை 10 புள்ளிகள் பெற்றார். மேலும் 13 முறை துல்லியமான (Xs) இலக்கை அம்பு தாக்கியது. கொரிய வீராங்கனை அன் சன் 680 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இது ஒலிம்பிக் போட்டியின் சாதனையாகும். முதல் மூன்று இடத்தை கொரிய வீராங்கனைகள் பிடித்தனர்.
கடந்த ரியோ ஒலிம்பிக்கில் தனிநபர் தகுதிப்பிரிவில் 20-ஆவது இடத்தை பிடித்த தீபிகா குமாரி, இம்முறை சிறப்பாக செயல்பட்டு பட்டியலில் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதனிடையே, 28 ஆம் தேதி நடைபெறும் நாக்அவுட் சுற்றில் (1/32) தீபிகா குமாரி பூடான் வீராங்கனை கர்மாவை எதிர்கொள்கிறார்.