சிரம்பான், ஜூலை 24:
ரெம்பாவ்வின் கம்போங் செபராங் பத்து ஹம்பரில் உள்ள ஒரு வீட்டின் பெரிய படுக்கையறையில் பாம்பு கடித்ததாக நம்பப்படும் 17 மாத குழந்தை உயிரிழந்தது.
பாதிக்கப்பட்ட முகமட் டேனியல் இக்வான் முகமட் தனது மூன்று வயது சகோதரருடன் அறையில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்தபோது அவர்களது தாயும் அவர்கள் கூட இருந்ததாகவும் ரெம்பாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஹஸ்ரி முகமட் தெரிவித்தார்.
குழந்தையின் தாய் தன் மகன் அலறுவதைக் கேட்டு அங்கு பார்த்த போது, ஒரு பாம்பு அறையில் இருந்த ஒரு துளைக்குள் போவதைக் கண்டார் என்றும் உடனடியாக அவர் தனது மகனை பரிசோதித்து பார்த்தபோது பாதிக்கப்பட்டவரின் இடது உள்ளங்கையில் பாம்பு கடித்த அடையாளங்கள் இருந்ததாகவும் போலீஸ் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தது.
பாம்புக்கடிக்கு உள்ளான குழந்தையை உடனடியாக சிகிச்சைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை இன்று அதிகாலை 1 மணியளவில் இறந்தது என்றும் ஹஸ்ரி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.