(கோகி கருணாநிதி)
இஸ்கண்டார் புத்ரி:
இங்குள்ள சில்க் (SILC) தொழிற்பேட்டை பகுதியில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாடு சம்பவத்தைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறிய நான்கு தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஜோகூர் மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் வெளியிட்ட தகவலின்படி, மாசுபாடு குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர், ஜோகூர் சுற்றுச்சூழல் துறை இயக்குநர், கோத்தா இஸ்கண்டார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பண்டாக் அகமட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.

ஜோகூர் சுற்றுச்சூழல் துறை மேற்கொண்ட அமலாக்கச் சோதனையில், நான்கு தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நான்கு தொழிற்சாலைகளும் தங்களது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டன.
மாசுபாட்டிற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லிங் தியான் சூன் தெரிவித்தார்.






















