பள்ளிக்கல்வியில் புதிய உத்தரவுகள்

அதிரடி  பிறப்பித்துள்ள சீனா!

பள்ளிக்கல்வியில் லாபம் ஈட்டக்கூடாது. அனைத்து கல்வி நிறுவனங்களையும் லாபம் நோக்கம் இல்லாத நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என சீனா உத்தரவிட்டுள்ளது.

இது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகி உள்ளது. பள்ளி, பள்ளிக்குழந்தைகளுகு சிறப்பு பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் அனைத்துக்கும் இந்த தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம், கல்வி நிறுவனங்கள் லாபம் ஈட்டக்கூடாது, அந்நிய முதலீட்டு நிறுவனங்களில் இருந்து முதலீட்டை திரட்டக்கூடாது, பங்குச்சந்தை மூலம் பணம் திரட்டக்கூடாது, இந்த துறையில் இருக்கும் நிறுவனங்களை வாங்கக்கூடாது என பல உத்தரவுகளை சீனா வெளியிட்டுள்ளது.

அதே போல பள்ளிக்கல்வித்துறையில் முதலீடு செய்யக்கூடாது என்றும் இந்தத் துறையில் வெளிநாட்டு முதலீட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

சீனா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் கல்வி தொழில்நுட்பம் பெருமளவுக்கு வளர்ந்துவரும் நிலையில், சீனாவின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் ,  கல்வியாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் புதிய கல்வி நிறுவனங்களுக்கான அனுமதியும் கட்டுப்படுத்தப்படும்.மேலும் கல்வித்துறையில் கண்காணிப்புகள் அதிகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வார இறுதி வகுப்புகள், சிறப்பு வகுப்புகளுக்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் பள்ளிக்கல்வி சந்தையின் மதிப்பு 10,000 கோடி டாலர்களுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. சீனாவில் பள்ளிக்கல்வியில் உள்ள நிறுவனங்கள் சில பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அந்த பங்குகள் கடுமையாக சரிந்தன. சில பங்குகள் 50 சதவீதத்துக்கு மேல் கூட சரிவைச் சந்தித்தன.

கடந்த சில மாதங்களாக தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது அதிகக் கட்டுப்பாட்டை சீனா விதித்துவந்தது. அலிபாபா உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஐபிஓ நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வியில் கடும் நடவடிக்கையை சீனா எடுத்திருக்கிறது.

இந்தத் துறையில் எந்த ஒரு சிறு அறிவிப்பும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என முதலீட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 1,000 கோடி டாலர் அளவுக்கு அந்நிய முதலீடு சீனாவின் பள்ளிக்கல்வி துறைக்கு வந்திருக்கிறது.

அலிபாபா, டென்சென்ட், சாப்ட் பேங்க், வார்பர்க் பின்கஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சீனாவில் பள்ளிகல்வி துறையில் முதலீடு செய்திருக்கின்றன.

மூன்று குழந்தை திட்டம்

பயிற்சி மற்றும் அதிக வீட்டுப்பாடங்கள் மூலம் குழந்தைகளின் அதிக நேரத்தை இதுபோன்ற நிறுவனங்களே எடுத்துக்கொள்கின்றன. தவிர இதுபோன்ற பயிற்சிகளுக்காக பெற்றோர்கள் அதிகம் செலவு செய்ய வேண்டி இருப்பதால் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்கிறார்கள்.

இதனால் சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இளையவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என சீனா கருதுவதாக வல்லுநர்கள் கூறியிருக்கின்றனர்.

இதன் காரணமாகத்தான் சமீபத்தில் மூன்று குழந்தை திட்டம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கல்விக்கு அதிகம் செலவு செய்யத் தேவையில்லாத சூழல் இருந்தால்தான் இந்த திட்டம் வெற்றியடையும் என கருதுவதால் பள்ளிகல்விதுறையில் லாபம் ஈட்டுவதை சீனா தடுத்திருக்கிறது.

மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக இருந்ததால் சீனாவில் 1980- ஆம் ஆண்டு முதல் ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்தது. இந்த திட்டத்தால் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, பெற்றோர்கள் தனித்து இருப்பது உள்ளிட்டவற்றில் பல சிக்கல்கள் இருந்தன. அதனால் இந்த திட்டம் 2016- ஆம் ஆண்டு ஜனவரில் முடித்துக்கொள்ளப்பட்டு இரு குழந்தை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தத் திட்டம் நான்கு ஆண்டுகள் அமலில் இருந்தாலும் குழந்தைகள் பெற்றுக்கொள்வது அதிகம் இல்லை. 2020-ம் ஆண்டு 1.2 கோடி குழந்தைகள் மட்டுமே சீனாவில் பிறந்துள்ளன. அதனால் கடந்த மே மாதம் 3 குழந்தை திட்டத்தை சீனா அறிமுகம் செய்துள்ளது. மூன்று குழந்தை திட்டம் அறிவிக்கப்பட்டாலும் 2025- ஆம் ஆண்டுக்கு பிறகுதான் குழந்தைகள் பிறப்பில் பெரிய மாற்றம் காண முடியும் என பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

குழந்தைகள் மீது அரசுக்கு அக்கறை இருப்பது நல்லதுதான். ஆனால் ஒரே நாளில் விதிமுறைகளை மாற்றி அமைத்தால் முதலீட்டாளர்களின் நிலை என்னவாகும் என்பதையும் அரசு யோசிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here