ஷா ஆலாம் : கடந்த மாதம் ஷா ஆலாம், பிரிவு 25, தாமான் ஶ்ரீ மூடாவில் வயதான பெண்மணி ஒருவரின் கொலைக்கான விசாரணைக்கு உதவும் நோக்கில் இந்திய பிரஜை ஒருவரை சிலாங்கூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஷா ஆலாம் மாவட்ட காவல்துறை துணை தலைவர் பஹுருடின் மத்தாயிப் இது பற்றி கூறிய போது, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 8) காலை 9 மணியளவில் ஜாலான் பத்து 8, புக்கிட் கெமுனிங், பிரிவு 25 இல் அறுபது வயது மதிக்கத்தக்க இந்திய பிரஜை ஒருவரை குற்றப்புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.
“சந்தேக நபர் இன்று (ஆகஸ்டு 9) காலை 10 மணிக்கு ஷா ஆலாம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, போலீஸ் விசாரணையின் பொருட்டு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் ” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
கடந்த ஜூலை 26 ஆம் தேதி காலை 7.06 மணியளவில் தாமான் ஶ்ரீ முடாவில் ஒரு வரிசை கடை வீட்டின் பின்னால், முகம் மற்றும் தலையில் காயங்களுடன், அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு உள்ளூர் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகவும் பஹுருடின் கூறினார்.
குற்ற சம்பவங்கள் ஓர் கண்காணிப்பு கேமராவில் பதிவானதை தொடர்ந்து, சந்தேக நபரை போலீசார் அடையாளம் கண்டு, இந்திய நாட்டு ஆடவரை கைது செய்தது.
இவ்வழக்கு கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302 ன் கீழ் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
– பெர்னாமா