கோலாலம்பூர்: சுங்கை கெடோன்டோங், கோலக்குபு பாருவில் உள்ள பாறைப் பகுதியில் சிக்கிய ஒன்பது பேரை மீட்பு குழுவினர் நேற்று இரவு காப்பாற்றினர்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) தலைவர் நொராஸாம் காமிஸ் கூறுகையில், ஆற்றில் திடீரென ஏற்பட்ட நீரோட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சிக்கிக்கொண்டவர்கள் 16 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறினார்.
இரவு 7.55 மணியளவில் இச்சம்பவம் தொடர்பில் மீட்புத்துறைக்கு அழைப்பு வந்தது என்றும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, கோலக்குபு பாருவில் இருந்து ஒன்பது பேர் கொண்ட மீட்புக்குழு ச்ந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
“மீட்புக்குழுவினர் இரவு 8.27 மணிக்கு அந்த இடத்தை அடைந்ததாகவும், ஆற்றைக்கடக்க முயன்ற ஒன்பது பேரில் இருவர் ஆற்றைக் கடந்து வந்துவிட்டனர் என்றும், அவர்களுடைய நண்பர்கள் ஏழு பேர் பாறைப்பகுதியில் சிக்கிக்கொண்டனர்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெற்றிகரமாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாக நொராஸம் கூறினார்.