துருக்கி நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னைத் தானே பல மணி நேரங்களாக தேடியது நகைப்புக்குக்குரிய செய்தியாக வெளியாகியுள்ளது.
துருக்கி நாட்டில் இனெகோல் நகருக்கு அருகே கயாகா என்ற பகுதி உள்ளது. இப்பகுதியை சேர்ந்த நபர்தான் பெய்ஹன் முட்லு. இவருக்கு வயது 50. இவர் தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். பின்னர் காட்டுப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டார்.
இதைத்தொடர்ந்து, அவரது நண்பர்கள் காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர். காவல்துறையினரும் அறிக்கை தாக்கல் செய்து காட்டுக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில், பெய்ஹன் முட்லுவின் பெயரை சொல்லி தேடியுள்ளனர்.
அப்போது, காவல்துறையினருடன் சேர்ந்து தேடியவர்களுக்கு மத்தியில் இருந்து ‘நான் இங்கதான் இருக்கேன்’ என்று ஒரு குரல் எழுந்தது. இத்தனை மணி நேரமாக பெய்ஹன் முட்லு போதையில் போலீசாருடன் சேர்ந்து தன்னைத் தானே தேடிக்கொண்டு இருந்துள்ளார்.
காவல்துறையினர் வேறு யாரையோ தேடுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு கூட்டத்தில் ஐக்கியமாகியுள்ளார் பெய்ஹன் முட்லு. பின்னர் இவ்வளவு நேரமாக தன்னைத்தான் தேடிக்கொண்டு இருந்துள்ளனர் என அவருக்கு புரிந்துள்ளது.
பெய்ஹன் முட்லு செம போதையில் இருப்பதைக் கண்ட காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்று அவரது வீட்டில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.