காஜாங் பெர்சியரான் செளஜானா இம்பியானில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிலாங்கூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) தலைமை கண்காணிப்பாளர் அஸ்மான் ஷாரியாத் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து அதிகாலை 5.15 மணிக்கு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
24 வயதான நபர் சுங்கை லாங்கில் உள்ள தனது நண்பரின் வீட்டில் இருந்து தாமான் காஜாங் பெர்டானாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார் என்று முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. கார் விபத்துக்குள்ளான இடத்திற்கு வந்தவுடன், அவர் ஓட்டி வந்த பெரோடுவா மைவி கார் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுற பாதையில் உள்ள சாலை பிரிப்பான் மீது சறுக்கியதால் அவரது வாகனம் கவிழ்ந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இரத்த மாதிரிகள் பகுப்பாய்வுக்காக எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரணை செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.