கேஎல்எஸ்ஐசிசிஐ உயர்மட்ட உறுப்பினர்கள் தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் செனட்டர் வான் அகமட் பைசல் பின் வான் அகமட் கமால் உடனான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை சபையில் தலைவர் டத்தோ ராமநாதன் இந்தியர்களுக்காக வர்த்தக வாய்ப்புகள் குறித்து துணை அமைச்சருடன் கலந்துரையாடினார்.
கோவிட்-19 தொற்றினால் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதனை நாம் மறுக்க இயலாது.
அதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வரும் இவ்வேளையில் வர்த்தகர்களுக்கு குறிப்பாக இந்திய வர்த்தகர்களுக்கு அரசாங்கம் உதவிட வேண்டும் என்று டத்தோ ராமநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய ஒற்றுமை அமைச்சின் கீழ் வழங்கப்படும் நிதி இந்திய வர்த்தகர்களுக்கும் சென்று அடைகிறது என்பதனை உறுதி செய்ய வேண்டும். இந்தியர்களின் மிகப்பெரிய பண்டிகை என்றால் அது தீபாவளிதான். ஆனால் கடந்தாண்டு தொடங்கி கோவிட் தொற்றின் காரணமாக பண்டிகை காலத்திலும் வியாபாரம் இல்லாமல் பலர் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கினர்.
அதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்பட உறுதுணையாக இருக்கும் இந்திய சமூகத்திற்கு வரும் காலங்களில் அதிகமாக உதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.