அமெரிக்காவின், தெற்கு கலிபோர்னிய நெடுஞ்சாலையில் பயணித்த மக்கள், சாலையில் சிதறி கிடந்தக் பணத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அனைவரும் வாகனங்களை நடுவழியில் நிறுத்திவிட்டு, பணத்தை எடுக்க அலைமோதினர்.
இதனை வீடியோவாக எடுத்து, பகிர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் டெமி பேக்பி, ‘இது மிகவும் விநோதமான நிகழ்வு. யாரோ பணத்தை வீதியில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். சான்டியோகாவே முடங்கியுள்ளது. மக்கள் முந்தியடித்து கொண்டு வீதியில் கிடக்கும் கோடிக்கணக்கான மதிப்பிலான பணத்தை ஆர்வமுடன் எடுப்பதைக் காண முடிகிறது” என்றார்.
அவ்வழியாக டிரக் ஒன்றில், பணக்கட்டுகள் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அப்போது டிரக்கின் கதவு திடீரென திறந்ததில், பணக்கட்டுகள் வீதியில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வீதியில் எடுத்த பணத்தை திருப்பி தராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டது.
பணம் கொட்டும்போது அந்த வழியாக சென்ற வாகனங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. அதை வைத்து பணத்தை எடுத்துச் சென்றவர்களை கண்டுபிடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், டிரக் வண்டி ஓட்டுநர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.