கெப்பாளா பாத்தஸ், நவம்பர் 24 :
இன்று அதிகாலை, கோத்தா கோலமூடாவில் உள்ள கோம்ப்ளெக்ஸ் பாசார் பிசிக் இக்கான் என்ற இடத்தில், போலீசாரால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஆற்றினை நீந்திக்கடக்க முயன்ற இருவர், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக, கோலமூடா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு அதிகாலை 5.32 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, காவல்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்பிச் செல்லும் போது, அடையாளம் தெரியாத இருவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக நடவடிக்கை அதிகாரி முகமட் யுஸ்னி மன்ஷோர் தெரிவித்தார்.
மேற்பரப்பு தேடல் முறையைப் பயன்படுத்தி, தீயணைப்பு வீரர்களால் தேடல் மற்றும் மீட்பு பணி செயல்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
“போலீஸைத் தவிர்ப்பதற்காக இருவரும் ஆற்றில் நீந்திச் சென்றபோது, நீரில் மூழ்கியிருக்கலாம் என்று எங்களிடம் கூறப்பட்டது.
இருவரையும் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது,” என்றார்.
மேலும்,சம்பவம் நடந்த இடத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக யுஸ்னி கூறினார்.
இந்த மீட்புப் பணிக்கு பட்டர்வொர்த்தில் இருந்து வரும் தீயணைப்பு படையும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.