ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, நெதர்லாந்து நாட்டில் அமலில் உள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகளை, வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வரை நீட்டித்து, அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மார்க் ரூட்டே பேசியதாவது: கிறிஸ்துமஸ் நேரத்தில் பொது மக்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி இதுவல்ல. குழந்தைகளை ஒமைக்ரான் தொற்று அதிக அளவில் தாக்குவதால், பள்ளிகளுக்கு விடப்பட்ட இரண்டு வார விடுமுறை தற்போது மூன்று வாரமாக நீட்டிக்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகரிப்பதால் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலைமைக்கு அரசு தள்ளப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று, டெல்டா வகை கொரோனாவை விட மிகவும் வேகமாகப் பரவி வருகிறது என்றார்.
நெதர்லாந்து நாட்டில் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி முதல் உணவகங்கள், பொது இடங்கள், திரையரங்குகள் போன்றவை மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது விடுமுறைக் காலத்திலும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.