ஷா ஆலம், டிச.23 –
எதிர்வரும் டிசம்பர் 27, முதல் நாட்டில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சபா, சரவாக் மற்றும் கிழக்கு கடற்கரை மாநிலங்களான திரெங்கானு, கிளந்தான் மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரித்துள்ளதாக, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் (நட்மா) இயக்குநர் ஜெனரல் டத்தோ அமினுடின் ஹாசிம் தெரிவித்தார். .
“இன்று பிற்பகல் 1 மணியளவில், பகாங்கில் குவந்தான், பெக்கான் மற்றும் ரோம்பின், சிலாங்கூரில் கிள்ளான் மற்றும் கோல லங்காட் மற்றும் ஜோகூரில் உள்ள கோத்தா திங்கி ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் “கிழக்கு சபா மற்றும் தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் மேற்கு சரவாக் ஆகிய பகுதிகளில் காலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.
“தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையோரப் பகுதியிலும் நள்ளிரவு புயல்கள் வீச வாய்ப்பு உள்ளது.
“டிசம்பர் 27 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் பருவமழையைப் பொறுத்தவரை, மேற்கு சரவாக்கில் தொடர்ச்சியான மழையைக் கொண்டுவருவதற்கான சாத்தியம் உள்ளது,” என்று அவர் கூறினார்.
எதிர்பார்க்கப்படும் இந்த வானிலையை மனதில் கொண்டு, அனைத்து நிகழ்வுகளுக்கும் நட்மா மற்றும் பல்வேறு ஏஜென்சிகள் தயார் நிலையில் இருப்பதாக அமினுடின் கூறினார்.
மேலும், எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளால் வழக்கமாக பருவமழை பெய்யாத பகுதிகளும் வெள்ளத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்றும் அவர் கூறினார்.